Thursday, November 28, 2013

வட்டாரம் (2006)



பழிவாங்குதலில் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. பழிவங்கும் உணர்ச்சி ஒரு இயல்பான உடனடி உணர்ச்சி என்கிறது மகாபாரதம் ஆனால் அதை ஆற அமர திட்டமிட்டு செய்வதில் கூடுதல் ஆனந்தம்தான். வஞ்சிக்கப்பட்டவர்க்கு தன் ஏதிரிகளை ஒன்றன்பின் ஒன்றாக களையறுப்பதுதான் கிடைக்கும் ஒரே ஆறுதலாக இருக்கக்கூடும்.

பர்மா (ஆர்யா) ஒரு சிறு, துப்பாக்கி கடத்தல்காரன். தமிழ் எழுத படிக்க தெரியாது, துப்பாக்கிகளைப் பற்றி தெரிந்துக்கொள்வதற்காகவே ஆங்கிலம் கற்றுக்கொண்டவன் (ஏனென்றால், தமிழில் அப்படிப்பட்ட புத்தகங்கள் வருவதில்லை).  அவனின் சிறு வயதிலே அவன் தந்தை தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பொய் குற்றம் சாட்டப்பட்டு அவமானப்பட்டு இறக்கிறார்.  அவர் எஜமானர் குருபாதம் (நெப்போலியன்), பல தொழில் செய்யும் சமூக விரோதி.  பர்மாவுக்கு அவர்பால் ஒரு ஈர்ப்பு.  தானும் ஒரு நாள் குருபாதம் போல் வளரவேண்டும் என்று அவரிடமே வேலைக்கு சேர்கிறான்.  படிப்படியாக குருபாதத்திடம் செல்வாக்குப் பெற்று, தன் கனவிற்கு குறுக்கே வருவோரை வீழ்த்தி தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகிறான்.

"வட்டாரம்" ஒரு மிக சாதரணப் படம்தான்.  ஆனால், ரசிக்கவைக்கும் திரைக்கதையாலும், முக்கிய கதாப்பாத்திரங்களின் இயல்பான நடிப்பாலும் மீண்டும் மீண்டும் அலுப்பு தட்டாமல் பார்க்கவைக்கிறது.  அடிமட்ட அடியாளாக சேரும் பர்மா, குருபாதத்தின் நம்பிக்கையைப்பெற பல சோதனைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக குருபாதத்தின் நீண்ட நாள் வலது கையான அயிராவணம் (என்ன பெயரோ?) பர்மாவை வெறுக்கிறார். பல அவமானங்களை, பழிகளை, சந்தித்தாலும், சற்றும் அசைந்துகொடுக்காமல், மெல்ல மெல்ல குருபாதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி பிறகு தன் பழிவாங்கலை துவக்குகிறான்.  தன் எதிரியை ஒருபக்கம் ரசித்துக் கொண்டே மறுபக்கம் அவருக்கு குழி பறிக்கும் காட்சிகள் மிக அருமை.

பரத்வாஜின் இசை இந்தப் படத்திற்கு பலம்.  "மகாகவி காளிதாஸ்" படத்தின் "யார் தருவார் இந்த அரியாசனம்" என்ற பக்திப் பாடலை இந்தப் படத்தில் இடை இடையே பர்மாவின் எண்ணவோட்டத்திற்கு தகுந்தவாறு, அவனின் வளர்ச்சியைக் குறிக்கும் பாடலாக பயன்படுத்தி, அப்போதெல்லாம் குருபாததின் நாற்காலியை காண்பிப்பது அற்புதம்.

ஆர்யாவின் உணர்ச்சியற்ற, அலட்ச்சிய நடிப்பு, "ஓரம்போ"வை போல் இந்த படத்திற்கும் ஏக பொருத்தம்.  நெப்போலியன், வழக்கமான வேட்டி, அரிவாள் இல்லாமல் கோட்டும், பூட்டும், தலைமுடி கலரிங்கோடு ஒரு பந்தாவான தோற்றம்.  யாரும் மற்றவர் காலைப் பிடித்து வாழ்வதை விரும்பாதவர். சாகும் தருவாயிலும், காலைப் பிடித்தால் உயிர் பிழைக்கலாம் என்ற என்றபோதும், தன் கொள்கையில் மாறாமல் மிளிர்கிறார். தன் குருநாதர் பாலச்சந்தரின் வித்தியாசமானப் பொருட்களைக் காண்பிக்கும் பாணியை மட்டுமே கொண்டிருந்தாலும், திரைக்கதையிலும், இயக்கத்திலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் இயக்குனர் சரண்.

அப்படி ஒன்றும் அட்டகாசமாக இல்லையென்றாலும், பர்மாவின் செயல்முறைகள் சில "அட" ரகம்.  Alfred Hitchcock குறிக்கும் Refrigerator Movies (பார்க்கும்போது சுவாரஸ்யமாகவும், பார்த்தப்பின்னர் அசட்டுத்தனமாகவும் தோன்றும் படங்கள்) வரிசையில் "வட்டாரம்" இடம்பெற தகுதியுடையது.

1 comment:

  1. // குறிப்பாக குருபாதத்தின் நீண்ட நாள் வலது கையான அயிராவணம் (என்ன பெயரோ?)

    அது ஐராவதம் அன்றோ ?

    ReplyDelete